நாடாளுமன்ற தேர்தலில் நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சூரியமூர்த்தி மாற்றம் : புதிய வேட்பாளராக மாதேஸ்வரன் அறிவிப்பு

நாமக்கல் தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் சூரியமூர்த்தி திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த புதன்கிழமை தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய 27ம் தேதி கடைசி நாள்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. இதில் கூட்டணி கட்சிகளுக்கு தமிழகத்தில் 18 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என 19 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதியுள்ள 21 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இதில் கொமதேக கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நாமக்கல் தொகுதியில் சூரியமூர்த்தி போட்டியிடுவார் என்று அக்கட்சித் தலைவர் ஈஸ்வரன் அறிவித்தார்.

இந்நிலையில், நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய வேட்பாளராக மாதேஸ்வரன் அறிவிக்கப்பட்டுள்ளார். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஆட்சி மன்றக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில், உதயசூரியன் சின்னத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடுகிறது.