மக்களவை முதல் கட்டத் தேர்தலுக்கான அறிவிப்பாணையை வெளியிட்டது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம்

மக்களவை தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும் நிலையில் அதற்கான அறிவிப்பாணையை இன்று வெளியிட்டது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம்.

அந்த அறிவிப்பாணையில் மக்களவைத் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவை சந்திக்கும் பிஹாரில் மார்ச் 28 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள், மார்ச் 30-ல் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் முதல் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு காணும் மற்ற மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு, திரிபுரா, உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மேற்குவங்கம், அந்தமான் நிகோபர் தீவுகள், ஜம்மு – காஷ்மீர், லட்சத்தீவு மற்றும் புதுச்சேரியில் மார்ச் 27 வேட்புமனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் என்றும் இம்மாநிலங்களில் மார்ச் 28 ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30 கடைசி நாள் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த முதல்கட்ட தேர்தலில் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதாவது, தமிழகத்தில் 39 தொகுதிகள், ராஜஸ்தானில் 12, உத்தரப்பிரதேசத்தில் 8, மத்திய பிரதேசத்தில் 6, உத்தராகண்ட், அசாம், மற்றும் மகாராஷ்டிராவில் 5, பிஹாரில் 4, மேற்குவங்கத்தில் 3, அருணாச்சலப்பிரதேசம், மணிப்பூர், மேகாலையாவில் 2, சத்தீஸ்கர், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, அந்தோமான் நிகோபார் தீவுகள், ஜம்மு – காஷ்மீர், லட்சத்தீவுகள் மற்றும் புதுசேரியில் 1 தொகுதிகள் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

நாட்டின் 2024ம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் அட்டவணையை மார்ச் 16 ஆம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி வரும் ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை மொத்தம் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குகள் ஜுன் 4ம் தேதி எண்ணப்பட இருக்கிறது.