அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்டிபிஐக்கு திண்டுக்கல் : புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி – அதிமுக அதிகாரபூர்வ அறிவிப்பு

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து 16 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக இன்று வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளுடன் கூட்டணி ஒப்பந்தம் செய்துகொண்டது.

இதுதொடர்பாக அதிமுக தரப்பு விடுத்துள்ள அறிக்கையில், “அதிமுகவுக்கும், புதிய தமிழகம் கட்சிக்கும் இடையே இன்று உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி (தனி) நாடாளுமன்றத் தொகுதியை ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டது.

அதேபோல், அதிமுகவுக்கும், எஸ்டிபிஐ கட்சிக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியை ஒதுக்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், தனித் தனியே நேரில் சந்தித்து அதற்கான ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி தொகுதியில் போட்டியிடும் புதிய தமிழகம் தனிச்சின்னத்தில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது.