“பிரதமர் நரேந்திர மோடி 5 முறை அல்ல 50 முறை தமிழகம் வந்தாலும் வெற்றி பெற முடியாது” – வைகோ திட்டவட்டம்

பிரதமர் நரேந்திர மோடி ஐந்து முறை அல்ல, 50 முறை தமிழகத்துக்கு வந்தாலும் திராவிடத்தின் பிடியிலிருந்து விடுவிக்க முடியாது, அவர் எதையோ நினைத்துக் கொண்டு எதையோ பேசுகிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் மதிமுக சார்பில் திருச்சியில், கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். இந்நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தனது கட்சி வேட்பாளருடன் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “தமிழக முதல்வர் ஸ்டாலின் திராவிட இயக்கத்துக்கு அண்ணா காலத்திலிருந்து கோட்டையாக இருந்த திருச்சியை மதிமுகவுக்கு ஒதுக்கி கொடுத்திருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி ஐந்து முறை அல்ல, 50 முறை தமிழகத்துக்கு வந்தாலும் திராவிடத்தின் பிடியிலிருந்து விடுவிக்க முடியாது, அவர் எதையோ நினைத்துக் கொண்டு எதையோ பேசுகிறார்.

‘மேரா பாரத் மேரா பரிவார்’ என்று ஒவ்வொரு இடத்திலும் கூச்சலிட்டார். அப்படியென்றால் இந்தியா என்பது அவரிடைய பரிவாரம். அவரின் அமைப்பில் இருந்த பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இம்முறை மதிமுக திருச்சியில் மிகப்பெரிய வெற்றி பெறும். தமிழகத்திலும், புதுச்சேரியிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். இதை மக்கள் பார்க்கதான் போகிறார்கள்” என்றார்.