“பிரதமரின் வருகை தமிழக பாஜகவுக்கு ஊக்கத்தையும், மக்களுக்கு நம்பிக்கையையும் தந்துள்ளது” – அமைச்சர் எல்.முருகன்

“பிரதமரின் வருகை தமிழக மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது” என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களின் பேராதரவுடன் கடந்த ஐந்து நாட்களாக பிரதமர் மோடி தென்னிந்தியா முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். நாளை சேலத்தில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

கடந்த ஒரு வாரமாக தென்னிந்தியா முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறோம். பிரதமரின் வருகை தமிழகத்தில், பாஜகவுக்கு மிகப்பெரிய ஊக்கத்தை தந்திருக்கிறது. தமிழக மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக சிறந்த நல்லாட்சியை பிரதமர் வழங்கி வருகிறார். இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வது தான் பிரதமரின் ஒரே எண்ணமாக இருக்கிறது. அடுத்த 25 ஆண்டுகளுக்கு வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பாஜகவுக்கு தமிழகத்தில் ஆதரவு இருப்பதை காண முடிகிறது.

தேசத்தின் வளர்ச்சிக்கு யார் காரணம் என்றும், தேசத்துக்கு எதிரானவர்கள் யார் என்பதும் தெரியும். திமுக அவர்களின் அமைப்புகளை ஏவி விட்டு தான் தேர்தல் பத்திரங்களை பெற்றனரா?. ஊழல் குறித்து பேசுவதற்கு திமுகவைச் சேர்ந்தவர்கள் தகுதியற்றவர்கள்.

நீலகிரி தொகுதியில் அதிகமான வேலைகளை செய்திருக்கிறோம். மக்களவைத் தேர்தலில் அந்த தொகுதியில் போட்டியிட கட்சி தலைமை கூறினால் அதன்படி செயல்படுவேன்.” என்று அவர் தெரிவித்தார்.