ஆந்திராவில் செம்மரக்கடத்தலை தடுக்க முயன்ற காவலர் கார் ஏற்றி கொலை

ஆந்திராவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கார் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீசார் வழக்கம்போல் நேற்று இரவு ரோந்து சென்றனர். அன்னமய மாவட்டம் கே.வி.பள்ளி மண்டலம் குன்றேவாரி பள்ளி சந்திப்பு அருகே வேகமாக வந்த காரை தடுத்து நிறுத்த போலீசார் முயன்றனர்.

ஆனால் அந்த கார் நிற்காமல் போலீஸார் மீது ஏறிச் சென்றது. இதில் சிறப்பு அதிரடிப்படை காவலர் பி.கணேஷ் (30) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் காவலர் மீது காரை ஏற்றிய கடத்தல்காரர்கள் தப்பி ஓட முயன்றனர். ஆனால், காவல் துறையினர் விடாமல் அவர்களைத் துரத்தினர்.

அப்போது 3 பேர் தப்பியோடிய நிலையில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிடிபட்ட காரில் இருந்து 7 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய மூன்று பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அன்னமய்யா மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.