இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்காததைக் கண்டித்து துப்புரவுத் தொழிலாளர்கள் போராட்டம்

கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்காததைக் கண்டித்து துப்புரப்வுப் பணியாளர்கள் புதுக்கோட்டை நகராட்சி டிவிசன் அலுவலத்தை முற்றுகையிட்டு சிஐடியு தலைமையில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 42 வார்டுகளிலும் துப்புரவு பணி செய்வதற்காக தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் 288 துப்புரவு ஒப்பந்த பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் சார்பில் மாத மாதம் 12,000 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. சம்பளம் முறையாக வழங்கப்படாததால், சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் அவ்வப்பொழுது போராட்டம் நடத்திய பிறகு சம்பளம் வழங்குவது தொடர் கதையாக இருந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்து, புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் உள்ள புதுக்கோட்டை நகராட்சி 7-வது டிவிசன் அலுவலகத்தை முற்றுகையிட்டு 288 ஒப்பந்த துப்புரவு பணியாளர்களும் போராடட்த்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சியத் தொழிலாளர் சங்க (சிஐடியு) மாவட்டப் பொதுச் செயலாளர் கே.முகமதலிஜின்னா, துணைத் தலைவர் எம்.முத்தையா ஆகியோர் தலைமையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். பிஎப், இஎஸ்ஐ பிடித்த பணத்தை முறையாக வங்கியில் செலுத்த வேண்டும். துப்புரவு பணி செய்யும் தங்களுக்கு கைஉறை, துடைப்பம் உள்ளிட்ட உபகரணங்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் எழுப்பப்பட்டன.

நகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் கோரிக்கை நிறைவேறும் வரை வேலை செய்யமாட்டோம் என பணியை புறக்கணித்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.