எல்லையை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும், மீனவர்களின் 2 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய வாரங்களில் தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது அதிகரித்துள்ளது. மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை தமிழ்நாடு முதலமைச்சர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனாலும் மீனவர் கைதுகள் குறைந்த பாடு இல்லை.

இந்த நிலையில்தான், ராமேஸ்வரத்தில் இருந்து ஏராளமான படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். இந்திய – இலங்கை எல்லைப்பகுதியில் மீனவர்கள் முகாமிட்டு மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் அவர்களை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்து எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து இருக்கிறார்கள். இதில் 23 மீனவர்களை கைது செய்துள்ளதுடன், அவர்களின் 2 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது இலங்கைக் கடற்படை.

இதனால் கவலை அடைந்துள்ள தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, கடலில் அச்சமின்றி மீன் பிடிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல நேற்று வேதாரண்யம் அருகே ஆறுக்காட்டு துறையில் இருந்து மதியம் இரண்டு பைபர் படகுகளில் 5 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில், நள்ளிரவு 2 மணி அளவில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடல் கொள்ளையர்கள் திடீரென இவர்களை வழிமறித்து தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் மீனவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர்கள் வைத்திருந்த 2 ஜிபிஎஸ் கருவி, ஒரு செல்போன், ஒரு ஸ்மார்ட் வாட்ச், 50 கிலோ நண்டு, மீன் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கடலோர காவல் குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றானர். மீனவர்கள் மீதான கைது மற்றும் தாக்குதல் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வலுத்துள்ளன.