மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் மக்களுக்கான அரசு மத்தியில் அமைய ஓய்வின்றி உழைக்க வேண்டும் : அண்ணா நினைவு நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

அண்ணா நினைவு நாளையொட்டி ஸ்பெயினில் அலங்கரிக்கப்பட்ட அவரது திருவுருப்படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

திமுக நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு நாள் இன்று தமிழக அரசு சார்பிலும், திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி சார்பிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, தமிழ்த்தாயின் தலைமகனாகப் பிறந்து, நமக்கெல்லாம் அண்ணனாக அறிவு மன்னனாக வழிகாட்டிய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவுநாள். இன்று அமைதிப் பேரணியாகச் சென்ற கழக உடன்பிறப்புகள், பேரறிஞர் அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோடு உழைத்து மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் மக்களுக்கான அரசு மத்தியில் அமைய ஓய்வின்றி உழைக்க வேண்டும்! எண்ணித் துணிக கருமம்! என குறிப்பிட்டுள்ளார்.