புதுக்கோட்டை மாவட்டம் காசாவயல் பகுதியில் வறண்ட ஆற்றில் ஊற்று நீருக்காக ஊரே காத்திருக்கும் அவலம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே குடிநீர் முறையாக விநியோகிக்கப்படாததால் ஆற்றில் ஊற்றுத் தண்ணீருக்காக ஊரே காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆவுடையார்கோவில் ஒன்றியம் கீழ்குடி வாட்டாத்தூர் ஊராட்சியில் உள்ள சிறுகாசாவயலில் 120 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு போதுமான குடிநீர் இணைப்புகள் வழங்கப்படவில்லை. சில பொது குடிநீர் குழாய்கள் மட்டுமே உள்ளன. மேலும், இந்த கிராமத்தினருக்கு மாதத்தில் ஒருமுறையோ அல்லது இருமுறையோ தான் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

குடிநீருக்கு உத்தரவாதம் இல்லாததால், இப்பகுதி மக்கள் அங்கிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெள்ளாற்றில் ஊற்று தோண்டி, அதில் கசியும் தண்ணீரை பிடித்து குடித்து வருகின்றனர். எனவே, தங்கள் கிராமத்துக்கு பாதுகாப்பான குடிநீரை தடையில்லாமல் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சிறுகாசாவயல் தம்பம் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம் கூறியது: ஆவுடையார்கோவில் வட்டாரத்தில் வடகிழக்குப் பருவமழை நேரத்தில் ஒருபோகம் மட்டுமே நெல் விளைவிக்கப்படுகிறது. மற்ற நாட்களில் உள்ளூரில் விவசாய கூலி வேலைகூட கிடைக்காது. இந்த சூழலில், குடிநீரும் நாள்தோறும் வழங்கப்படுவதில்லை.

மத்திய அரசின் திட்டத்தில் வீட்டுக்கு வீடு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்ட நிலையில், இந்தக் கிராமத்தில் 2 பொதுக்குழாய்கள் மட்டுமே உள்ளன. அதிலும், மாதத்துக்கு ஒருமுறையோ அல்லது இருமுறையோதான் குடிநீர் வரும். அதுவும் எப்போது வரும் என்றுகூட எங்களுக்கு தெரியாது.

இதனால், தனியாரிடம் இருந்து ஒரு குடம் தண்ணீரை ரூ.20 கொடுத்து வாங்கும் நிலை உள்ளது. ஆனால், அந்த அளவுக்கு இப்பகுதி மக்களிடம் வசதி இல்லை. ஆகையால், காய்ந்து கிடக்கும் வெள்ளாற்றில் ஊற்று தோண்டி அதில் ஊறும் தண்ணீரை எடுக்க மணிக்கணக்கில் காத்திருந்து சேகரித்து பயன்படுத்தி வருகிறோம். ஒரு குடம் சேகரிக்க அரை மணிநேரமாவது உச்சிவெயிலில் காத்திருக்க வேண்டியுள்ளது.

இங்கு ஊரே திரண்டு ஊற்று தண்ணீரை எடுக்க காத்திருக்கும் நிலை உள்ளது. இந்நிலையில் ஊற்றுநீரும் பாதுகாப்பானதாக இருக்குமா என்பதும் அச்சமாக உள்ளது. எனவே, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து பாதுகாக்கப்பட்ட குடிநீரை நாள்தோறும் எங்கள் பகுதிக்கு விநியோகிக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து கீழ்குடி வாட்டாத்தூர் ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியது: கீழ்குடி வாட்டாத்தூர் ஊராட்சியில் 820 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு 5 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி வழியாக குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதில், காசாவயல் தம்பம் உள்ளிட்ட 6 கிராமத்தினருக்கு 30,000 லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வழியாக குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

தற்போது நாளொன்றுக்கு 3 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் இப்பகுதியில் இருப்பதால் குடிநீர் தொட்டியில் முழுமையாக நீர் நிரப்புவதில் சிரமம் ஏற்படுகிறது. ஆகையால், 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மேலும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு செல்லும் குடிநீர் குழாய்களில் இருந்து சிலர் குடிநீர் எடுப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அதுபோன்ற இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருகின்றன. குடிநீர் விநியோகத்தில் பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றனர்.