தாசில்தாரை தாக்கியதாக வழக்கு; நீதிமன்றத்தில் மு.க.அழகிரி நேரில் ஆஜர்

2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது தாசில்தாரை தாக்கிய வழக்குத் தொடர்பான விசாரணைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம், சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோயிலுக்குள், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து மேலூர் தேர்தல் அதிகாரியும், வட்டாட்சியருமான காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள், வீடியோ கேமராமேனுடன் அங்கு சென்று வீடியோ எடுத்தனர். இதற்கு மு.க.அழகிரி தரப்பு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அழகிரியுடன் இருந்தவர்கள் தன்னை அடித்து, உதைத்ததாக தாசில்தார் காளிமுத்து கீழவளவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மதுரை முன்னாள் துணை மேயர் மன்னன் மற்றும் திமுக நிர்வாகிகளான ரகுபதி, திருஞானம் உள்ளிட்ட 21 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்த வழக்கில் சாட்சி விசாரணை முடிந்து, விசாரணை இன்று நடைபெற்றது. இதற்கு முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழ்நாட்டின் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க.அழகிரி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராகினர். இதையடுத்து இவ்வழக்கில் வருகிற 12-ம் தேதி திங்கள் கிழமை தீர்ப்பு வழங்கப்படும் எனக்கூறி நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார். மு.க.அழகிரி நீதிமன்றத்தில் ஆஜரானதை அடுத்து, அவருடன் ஏராளமான திமுகவினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் குழுமியிருந்ததால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவியது.