9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடைப்பெறும்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!!!

தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரு தேதிகளில் இரண்டு கட்டமாக நடைப்பெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

9 மாவட்டங்களில் எப்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் என்பது குறித்து மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார், சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியாதவது, ”செப்.15க்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்.

நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடத்தப்படும்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறும். ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 12-ம் தேதி நடைபெறும்.  காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்காளர்கள் வாக்களிக்கலாம். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்களிக்கலாம். ஊரக உள்ளாட்சி தேர்தலில் 4 விதமான வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும்.

9 மாவட்டங்களுக்கும் தனித்தனியாக ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் பார்வையாளர்களாக நியமிக்கப்படுவர். 9 மாவட்டங்களிலும் அக்டோபர் 16-ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்.உள்ளாட்சித்தேர்தல் வாக்குப்பதிவு நடைமுறைகள் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும்”. என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்துள்ளார். புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதால் 9 மாவட்டங்களில் மட்டும் 2019ல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.