32வது டோக்கியோ ஒலிம்பிக் : 113 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடம்

32வது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் 113 பதக்கங்களை வென்று அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான டோக்கியோ ஒலிம்பிக் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் சூழலில், கடந்த ஆண்டே இந்த போட்டி நடந்திருக்க வேண்டும். ஆனால், கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டு இந்த ஆண்டு நடைபெற்றது.

இந்நிலையில் 32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் கடந்த 23ம் தேதி தொடங்கிய நிலையில், இன்றுடன் (ஆக.8ம் தேதி) நிறைவடைந்தது.

206 நாடுகளில் இருந்து 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். இந்தியா தரப்பில் 18 வகையான விளையாட்டுகளில் பங்கேற்று, 125 வீரர், வீராங்கனைகள் திறமையை வெளிப்படுத்தினர். மேலும் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் நேற்றுடன் முடிந்து விட்ட சூழலில், தடகள போட்டிகள் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்று நீரஜ் சோப்ரா வரலாறு படைத்தார்.

இதனைத்தொடர்ந்து கடைசி நாளான இன்று 13 தங்கப்பதக்கத்துக்கான போட்டிகள் அரங்கேறின. போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், பதக்க பட்டியலில் சீனாவை பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா முதலிடத்தை பிடித்தது. அதன்படி, அமெரிக்கா 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலம் என 113 பதக்கங்கள் பெற்றுள்ளது.

மேலும் 38 தங்கம், 32 வெள்ளி, 18 வெண்கலம் என 88 பதக்கங்களுடன் சீனா 2வது இடம் பிடித்தது. 27 தங்கம், 14 வெள்ளி, 17 வெண்கலம் என 58 பதக்கங்களை கைப்பற்றி ஜப்பான் 3ம் இடம் பிடித்தது. ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என 7 பதக்கங்களுடன் இந்தியா 48வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.