இடைத்தேர்தல் புறக்கணிப்பு : `அ.தி.மு.க.வின் முடிவு, மேலிட உத்தரவு’ -ப.சிதம்பரம்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி காலமானதைடுத்து அங்கு அடுத்த மாதம் 10-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கிடையே நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தி.மு.க. தலை மையிலான இந்தியா கூட்டணி 40 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது.

அதே வேகத்துடன் தி.மு.க. சார்பில் விக்கிர வாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுவார் என தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ம.க.வுக்கு அந்த தொகுதி ஒதுக்கி பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி அங்கு பா.ம.க. மாநில துணைத்தலைவர் சி.அன்புமணி வேட்பாளராக போட்டியிடுகிறார். அ.தி.மு.க. வேட்பாளர் யார் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்தார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் தனது எக்ஸ் வலைதளத்தில் இன்று காலை பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கும் அ.தி.மு.க.வின் முடிவானது, அங்கு போட்டியிடும் பா.ம.க. வேட்பாளரின் வெற்றியை எளிதாக்கும் வகையில் மேலிடத்தில் (பா.ஜ.க.வில்) இருந்து உத்தரவு வந்துள்ளது என்பதற்கு இதுவே தெளிவான சான்று ஆகும்.

எனவே விக்கிரவாண்டி தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரின் அமோக வெற்றியை உறுதி செய்யவேண்டும் என்று ப.சிதம்பரம் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் கோவையில் நடைபெற்ற தி.மு.க. முப்பெரும் விழாவில் பேசிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் பேசுகையில், பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க.வுக்கு ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்று கூறிவிட்டு தற்போது அவர்களுக்காக தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ளது என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.