நீட்டை ஒழித்துக்கட்டுவது தான் இந்தியா கூட்டணியின் நிலைப்பாடு : அமைச்சர் அன்பில் மகேஸ் திட்டவட்டம்

நீட் தேர்வை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பது இந்தியா கூட்டணி கட்சியினரின் நிலைப்பாடு என திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருச்சி வரங்கனேரி பகுதியில் கலைஞரின் நூலகம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளி மாணவ மாணவிகளுக்கான மடிக்கணினி, 10 மற்றும் 12ம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்து கொண்டு கலைஞர் நூலகத்தை திறந்து வைத்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாடு முதல்வர் மட்டுமின்றி, இந்தியா கூட்டணி தோழமை கட்சிகள், நீட் தேர்வு ஏழை மாணவர்களுக்கு எதிரான திட்டம் என்பதுதான். எனவே அதை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதே இந்த கூட்டணியின் நிலைப்பாடாகும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நீட் திட்டத்தை ஒழித்து கட்டவேண்டும் என உறுதியுடன் உள்ளார்” என்றார்.

மேலும், “நீட்டை பொருத்தவரை முதல்வர் ஸ்டாலின் என்ன கருத்து சொல்கிறாரோ, அதை வழிமொழிகிறோம்” என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் பிரகாஷ், உட்பட கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.