உதகை கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சி : உற்சாகமாக நடந்த படகுப் போட்டி

ஊட்டியில் கோடை விழாவின் ஒரு பகுதியாக இன்று படகுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் மு.அருணா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மலைகளின் அரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் இந்தாண்டு கோடை சீசனுக்காக வந்த லட்சக் கணக்கான சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க அரசு தாவரவியல் பூங்காவில் 126-வது மலர் கண்காட்சி, நூற்றாண்டு ரோஜா பூங்காவில் 19-வது ரோஜா கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 64-வது பழக்கண்காட்சி ஆகியவை நடைப்பெற்றன.

இந்நிலையில், ஊட்டி கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சியாக சுற்றுலாத் துறை சார்பில் இன்று உதகை படகு இல்லத்தில் படகுப் போட்டிகள் நடைப்பெற்றன. இந்த படகுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் மு.அருணா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்தப் படகுப் போட்டிகள் ஆண்கள் இரட்டையர் போட்டி, பெண்கள் இரட்டையர் போட்டி, தம்பதியர் போட்டி, பத்திரிகையாளர்களுக்கான போட்டி, படகு இல்லத்தில் பணி புரியும் ஊழியர்களுக்கான போட்டி என தனித்தனியாக நடைபெற்றது.

உதகை படகு இல்ல ஊழியர்களுக்கான துடுப்பு படகுப் போட்டி அங்கிருந்த அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. படகுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வெற்றி கோப்பைகளை வழங்கி கவுரவித்தார்.