ஹஜ் பயணிகளின் புனித பயணம் தொடங்கியது : டெல்லியில் இருந்து முதல் விமானம் புறப்பட்டது

டெல்லியில் இருந்து ஹஜ் பயணிகளின் புனித பயணம் இ்ன்று தொடங்கியுள்ளது. இதன்படி 2024-ம் ஆண்டில் சவுதி அரேபியாவுக்கு 1 லட்சத்து 75 ஆயிரத்து 25 இந்திய பயணிகள் ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மதீனாவுக்கு ஹஜ் பயணிகளை ஏற்றி கொண்டு, இன்று அதிகாலை 2.20 மணியளவில் முதல் விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்த விமானத்தில் 285 பயணிகள் ஹஜ்ஜிற்கு புனித பயணம் மேற்கொண்டுள்ளளனர்.

இதுகுறித்து டெல்லி ஹஜ் கமிட்டியின் தலைவர் கவுசர் ஜகான் கூறுகையில்,” இன்று புறப்பட்ட விமானத்தில், 285 ஹஜ் பயணிகள் பயணித்தனர். அவர்கள் அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்து கொள்கிறேன். இந்த ஆண்டில் மொத்தம் 16,500 பேர் டெல்லியில் இருந்து புறப்பட்டு செல்வார்கள்” என்று கூறினார்.

இதற்கு முன் கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஜெட்டா மற்றும் மதீனா நகரங்களில் நடப்பு ஆண்டிற்கான ஹஜ் பயணத்திற்கான ஏற்பாடுகளை செயலாளர் முக்தேஷ் கே. பர்தேஷி மறுஆய்வு மேற்கொண்டார். 2024 ஹஜ் ஒதுக்கீட்டின்படி, சவுதி அரேபியாவுக்கு 1 லட்சத்து 75 ஆயிரத்து 25 இந்திய பயணிகள் ஹஜ் பயணம் மேற்கொள்வார்கள் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.