மோடி பிரதமராக தொடர வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள் : வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன் பேட்டி

பிரதமர் பதவியில் நரேந்திர மோடி தொடர வேண்டும் என மக்கள் விரும்புவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

நாடு முழுவதும் 13 மாநிலங்களில் 88 மக்களவை தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு, இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். தனது வாக்கை பதிவு செய்த பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “அதிகமான மக்கள் வந்து வாக்களிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மக்கள் ஒரு நிலையான அரசாங்கத்தை விரும்புகிறார்கள். அவர்கள் நல்ல கொள்கைகள், முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியை விரும்புகிறார்கள்.

அதனால்தான் அவர்கள் வெளியில் (வாக்களிக்க) வருகிறார்கள் என நான் நினைக்கிறேன். பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் மக்கள் விரும்புகிறார்கள்.” என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.

கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் இன்று 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. எஞ்சியுள்ள 14 தொகுதிகளுக்கு வரும் மே 7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.