அரசுப்பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து : ஒருவர் உயிரிழப்பு, 25 பேர் காயம்

தஞ்சாவூரில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து நேர்ந்ததில், ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் இன்று காலை அரசு புறநகர் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அய்யம்பேட்டை அருகே மானாங்கோரை ஸ்டார் லைன் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலையோரம் இருந்த வாய்க்காலுக்குள் பேருந்து கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது.

இதில் 25க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அய்யம்பேட்டை காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் பொதுமக்கள் உதவியுடன் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த லட்சுமி (50) என்பவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து அய்யம்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.