நோயாளிகளின் தனிப்பட்ட தகவல்கள் தனியாருக்கு விற்க வாய்ப்பு : இந்திய மருத்துவ சங்கம் பகீர் புகார்

மத்திய அரசின் புதிய நடவடிக்கையால், நோயாளிகளின் தனிப்பட்ட தகவல்கள் தனியாருக்கு விற்கப்பட வாய்ப்புள்ளதாக இந்திய மருத்துவ சங்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

நோயாளிகளின் முழுத்தகவலையும் மத்திய அரசு பெற்று வருவதாகவும், இதன் மூலம் நோயாளிகளின் தனிப்பட்ட தகவல்கள் தனியாருக்கு விற்கப்பட வாய்ப்புள்ளதாகவும் இந்திய மருத்துவர் சங்கத்தின் நிர்வாகிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

”ஆயுஷ்மான் பார்த் திட்டத்தின் கீழ் நோயாளிகளின் சகல தகவல்களையும் மத்திய அரசு சேகரித்து வருகிறது. இம்மாதிரியான நடவடிக்கைகள், அடிப்படையில் தனிமனித உரிமைக்கு எதிரானவை. மத்திய அரசு சேகரிக்கும் நோயாளிகளின் தனிப்பட்ட தகவல்கள் தனியார் காப்பீடு மற்றும் மருத்து தயாரிப்பு நிறுவனங்களின் கைகளுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது” என இந்திய மருத்துவ சங்கத்தினர் தெரிவித்தனர்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இந்த அமைப்பின் நிர்வாகிகள், மத்திய அரசுக்கு எதிராகவும், அதன் அண்மை நடவடிக்கைக்கு எதிராகவும் பேட்டி அளித்தனர். சங்கத்தின் தேசிய தலைவரான அசோகன், ”40 ஆண்டுகளுக்கு முன்பு வரை சுகாதாரத்துறையில் அரசு முக்கிய பங்கு வகித்து வந்தது. அதன் பிறகு படிப்படியாக அந்த பொறுப்பிலிருந்து அரசு விடுபடத் தொடங்கியது.

இதனால் 70 சதவீதத்துக்கும் மேலான மருத்துவத்துறை சேவைகள் தனியார் வசம் சென்று விட்டன. இவ்வாறு தனியார் வசம், மத்திய அரசு சேகரிக்கும் நோயாளிகளின் தனிப்பட்ட தகவல்கள் சென்று சேர்வது நிச்சயம் ஆபத்தை விளைவிக்கும். மத்திய அரசின் இந்த போக்குக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவு இருக்கிறோம்” என்றும் அசோகன் தெரிவித்துள்ளார்.