அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு 

அம்பேத்கர் பிறந்தநாளான சமத்துவ நாளினையொட்டி திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் திருவுருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.

இதுதொடர்பாக திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், அம்பேத்கர் பிறந்தநாளான, சமத்துவ நாளினையொட்டி தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். முன்னதாக, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் திருவுருவப் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.

அப்போது, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வபெருந்தகை, மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதிமாறன், தமிழச்சி தங்கபாண்டியன், மாவட்டச் செயலாளர்கள் நே.சிற்றரசு, த.வேலு, மாதவரம் சுதர்சனம், திமுக சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ, இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, துணை அமைப்புச் செயலாளர் எஸ்.ஆஸ்டின், திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெ.கருணாநிதி, மருத்துவர் எழிலன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், தலைமை நிலையச் செயலாளர் துறைமுகம் காஜா, செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.