ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் குற்ற ஆவணங்கள் சிக்கியதாக அமலாக்கத் துறை தகவல்

ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் கடந்த 9-ம் தேதி நடந்த சோதனையில் பல்வேறு குற்ற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் கடந்த 9-ம் தேதி அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக் வீடு, சென்னை சாஸ்திரி நகரில் உள்ள பிரபல ஓட்டல் உரிமையாளரின் வீடு மற்றும் அலுவலகம், பெரம்பூரில் ஜாபர் சாதிக்குடன் தொடர்புடைய 3 பேரின் வீடு, புரசைவாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டல் என்று சோதனை நடத்தப்பட்டது.

இதுதவிர, மதுரை, திருச்சி என ஜாபர் சாதிக் மற்றும் இயக்குநர் அமீர் ஆகியோருக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அன்றைய தினம் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அமலாக்கத் துறை தனது எக்ஸ் பக்கத்தில், “9/4/2024 அன்று சென்னை, மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளியின் பல்வேறு இடங்களில் ஜாபர் சாதிக் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களுக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது. சோதனை நடவடிக்கையின்போது, பல்வேறு குற்ற ஆவணங்கள் மற்றும் சொத்து விவரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன” என்று தெரிவித்துள்ளது.