காங்கிரஸ் வேட்பாளரின் வாகனத்தை மறித்த கரும்பு விவசாயிகள் : நிதானமாக பேசிய வேட்பாளர் சுதா

மயிலாடுதுறை அருகே பிரச்சாரத்திற்காக வந்த காங்கிரஸ் வேட்பாளரின் வாகனத்தை கரும்பு விவசாயிகள் திடீரென மறித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக சுதா போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தஞ்சை மாவட்டம் பாபநாசம் வட்டத்தில் இன்று அவர் வாக்கு சேகரிப்பதற்காக சென்றிருந்தார். அவருடன் ஏராளமான கட்சியினரும் உடன் சென்றிருந்தனர். மருத்துவக்குடி பகுதியில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் வாகனத்தில் நின்றபடி அவர் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார்.

இதனிடையே திருமண்டங்குடி தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்தால் பாதிக்கப்பட்டு கடந்த 501 நாட்களாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த விவசாயிகள் அவ்வழியாக வாக்கு சேகரிக்க வந்த வேட்பாளர் சுதாவின் வாகனத்தை திடீரென மறித்து தங்களது கொந்தளிப்பை வெளிப்படுத்தினர். அப்போது பேசிய அவர்கள், ”வாழ்வாதாரத்தை இழந்து சுமார் 501 நாட்களுக்கு மேலாக போராடிக் கொண்டிருக்கிறோம். எங்களது போராட்டத்திற்கு இதுவரையும் எந்த ஒரு முடிவும் கிடைக்கவில்லை” எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக பிரச்சார வாகனத்தில் இருந்து கீழே இறங்கிய வேட்பாளர் சுதா, அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அப்போது, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தேர்தலுக்குப் பிறகு முடிவு எட்டப்படும் என கூறப்பட்டிருப்பதாக தெரிவித்தார். எனவே விவசாயிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். விவசாயிகள் சமாதானம் அடைந்ததை அடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.