அவமானமாகி, பிரச்சாரத்தை பாதியில் ரத்து செய்த மோடி : காங்கிரஸ் செல்வப்பெருந்தகை பேட்டி

காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை இன்று திருச்சிக்கு வருகை தந்தார் முன்னதாக வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பில் திருச்சியில் உள்ள மகாத்மா காந்தி தங்கிய எஸ்.எஸ். ராஜன் பங்களா அருகில் நினைவு தூணுக்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், “பாஜக பொய்யும் பித்தலாட்டமும் செய்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் இனி ஒருபோதும் இந்திய மக்கள் அதற்கு அனுமதிக்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பல்வேறு குற்றப் பின்னணி உடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு பிரச்சாரம் செய்தால் அவமானமாக போய்விடும் என தெரிந்து பிரதமர் மோடி தன்னுடைய பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு சென்றுவிட்டார்” என்றார்.

மேலும், “மோடி மாடல் ஆட்சியில் பாஜகவினர் அராஜகம் செய்து வருகிறார்கள். அதன் காரணமாகவே தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்கள். இந்த அராஜகத்தின் உச்சத்திற்கு முடிவு வந்து விட்டது. மோடியை அரசியல் களத்தில் இருந்தும், அதிகார களத்தில் இருந்தும் மக்கள் அப்புறப்படுத்துவார்கள். காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஒருபோதும் விட்டுக் கொடுக்காது” என்றார்.