“காங்கிரஸ் கட்சியால் இனி வாக்கு வங்கி அரசியல் செய்ய முடியாது” – ஜே.பி.நட்டா

“முன்பு காங்கிரஸ் கட்சி மக்களைப் பிரித்து வாக்கு வங்கி அரசியல் செய்தது. ஆனால், தற்போது பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அரசியலின் வரையறையை மாற்றிவிட்டார்” என்று பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் சித்தியில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக சாடினார். அப்போது பேசிய அவர், “முன்பு காங்கிரஸ் கட்சி மக்களைப் பிரித்து வாக்கு வங்கி அரசியல் செய்தது. அனைவரிடம் இருந்தும் வாக்குகளை பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட சில சாதி, சமுதாயம் அல்லது பிரிவுகளுக்காக மட்டும் அரசாங்கத்தை அமைத்தது. காங்கிரஸ் கட்சி அனைவரையும் உள்ளடக்கிய அரசாக இருக்கவில்லை.

ஆனால், தற்போது பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அரசியலின் வரையறையை மாற்றிவிட்டார். தற்போது மக்களை தவறாக வழிநடத்தி வாக்கு வங்கி அரசியல் செய்ய முடியாது. சாதி மற்றும் வகுப்புவாத அரசியலை இனி செய்ய முடியாது. தற்போது நடைபெறும் அரசியல், வளர்ச்சிக்கான அரசியலாகும். நீங்கள் செய்த பணிகளை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும். உங்கள் பணிகளின் அடிப்படையில்தான் மக்கள் உங்கள் எதிர்காலத்தை முடிவு செய்வார்கள்” என்றார்.