ஜாபர் சாதிக்கின் வீட்டுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற அனுமதி : டெல்லி நீதிமன்றம் உத்தரவு

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் வீட்டிற்கு மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் வைத்த சீலை அகற்ற டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

2000 கோடி ரூபாய் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக்கை மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், சென்னை மயிலாப்பூரில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள் சோதனைக்கு பின்பு அவரது வீட்டிற்கு சீல் வைத்து சென்றனர்.

இந்த சீலை அகற்றக்கோரி ஜாபர் சாதிக் தரப்பில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு சீல் வைத்தது ஏன்? என மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு நீதிபதி கேள்வி எழுப்பினர்.

அதற்கு மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் சீல் வைத்த வீட்டை பயன்படுத்துவதில் எவ்வித ஆட்சேனை இல்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதையடுத்து சீல் வைக்கப்பட்டுள்ள வீட்டை ஜாபர் சாதிக் குடும்பத்தினர் பயன்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.