மேற்கு வங்கம், அசாம் மற்றும் மணிப்பூரில் புயலால் ஏற்பட்ட உயிரிழப்புகளால் ஆழ்ந்த வேதனை அடைந்தேன் – அமித் ஷா உருக்கம்

புயலால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ள மேற்கு வங்கம், அசாம் மற்றும் மணிப்பூர் மாநில முதலமைச்சர்களுடன் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார்.

மேற்கு வங்க மாநிலத்தின் வடமேற்கு மாவட்டமான ஜல்பைகுரியில் நேற்று புயல் தாக்கியதில் 5 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதேபோல் அசாம் மாநிலம், தெற்கு சல்மாரா-மங்கச்சார் மாவட்டத்தில், புயல், மழையால் பிரம்மபுத்திரா ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் இரு குழந்தைகள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

மணிப்பூர் மாநிலத்திலும் பல்வேறு பகுதிகளில் நேற்று பெய்த மழை மற்றும் ஆலங்கட்டி மழையில் வீடுகள், கட்டிடங்கள் மற்றும் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்புகள் தொடர்பாக மத்திய உள்துறை அமித் ஷா இன்று அந்தந்த மாநில முதல்வர்களிடம் பேசி, மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் அமித் ஷா வெளியிட்டுள்ள பதிவில், ’மேற்கு வங்கம், அசாம் மற்றும் மணிப்பூரில் புயலால் ஏற்பட்ட உயிரிழப்புகளால் ஆழ்ந்த வேதனை அடைந்தேன். நான் அந்தந்த முதலமைச்சர்களிடம் பேசி, அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்துள்ளேன். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புகிறேன். இந்த நெருக்கடியான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடன் இருக்கவும், அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கவும் அனைத்து பாஜக தொண்டர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.