சென்னை சௌகார்பேட்டையில் ஹோலி கொண்டாட்டம் களைகட்டியது : வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி உற்சாகம்

சென்னை சௌகார்பேட்டையில் ஹோலி கொண்டாட்டம் களைகட்டியது. நாடு முழுவதும் ஹோலி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு வட மாநிலத்தை சேர்ந்த மக்கள் இன்று முதலே வண்ணப் பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.

ஹோலி பண்டிகையை பொறுத்தவரை வசந்த காலத்தை வரவேற்கும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை சௌகார்பேட்டையில் ஹோலி கொண்டாட்டம் களைகட்டியது. ஹோலி கொண்டாட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஈடுபட்டுள்ளனர்.

சென்னையின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த இளைஞர்கள், சிறுவர்கள், குடும்பத்தினர் என பல்வேறு தரப்பினர் இன்று காலை 7 மணி முதலே சௌகார்பேட்டை பகுதியில் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி களைகட்டியது. வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவரும், வண்ண பொடி கலந்த நீரை ஒருவர் மீது ஒருவர் தெளித்தும் கொண்டாடி வருகின்றனர். வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி அன்பையும், சகோதரத்துவத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து நண்பகல் வரை அப்பகுதியில் ஹோலி கொண்டாட்டம் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.