கேஜ்ரிவாலின் கைதுக்கு அவரது செயல்களே காரணம் : சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் கைதுக்கு அவரது செயல்களே காரணம் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், “அரவிந்த் கேஜ்ரிவாலால் நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். மதுவுக்கு எதிராக என்னுடன் இணைந்து பணியாற்றியவர்; குரல் கொடுத்தவர். தற்போது அவர் மதுபான கொள்கைகளை வகுத்து வருகிறார். கேஜ்ரிவாலின் கைதுக்கு அவரது செயல்களே காரணம்” என தெரிவித்துள்ளார்.

கடந்த 2011ம் ஆண்டு அன்னா ஹசாரே இயக்கத்தில் இணைந்த அரவிந்த் கேஜ்ரிவால், ஊழலுக்கு எதிராக ஹசாரே டெல்லியில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்திலும் கலந்து கொண்டார். இதன்மூலம் கவனம் ஈர்த்த கேஜ்ரிவால், பின்னர் 2012-ல் ஆம் ஆத்மி கட்சியை உருவாக்கினார்.

ஒரு முதல்வர் கைது செய்யப்படுவது இது முதல்முறை அல்ல என தெரிவித்துள்ள தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா, இது கடைசி முறையாகவும் இருக்கப் போவதில்லை என கூறியுள்ளார். கேஜ்ரிவாலின் கைது குறித்து ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒரு முதல்வர் கைது செய்யப்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன், சில வாரங்களுக்கு முன், ஜார்கண்ட் முதல்வரும் எங்கள் நண்பருமான ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட உள்ளதை அறிந்த அவர், ஆளுநர் மாளிகைக்குச் சென்று பதவியை ராஜினாமா செய்தார். இல்லாவிட்டால் என்ன நடக்கும் என்பது அவருக்குத் தெரியும். முதல்வராகவே அவர் கைது செய்யப்பட்டிருந்தால், அரசியல் சாசனத்தைப் பயன்படுத்தி பாஜக, அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி இருக்கும்.

டெல்லி விஷயத்தில் தற்போது அதுதான் எனது கவலை. சிறையில் இருந்தாலும் கேஜ்ரிவால் முதல்வராக தொடருவார் என்பது ஆம் ஆத்மி கட்சியின் நிலைப்பாடாக தொடருமானால், அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு பாஜக டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும். அரவிந்த் கேஜ்ரிவால் முதல் நபர் அல்ல; அவர் கடைசி நபரும் அல்ல. இது தொடரும்” என தெரிவித்துள்ளார்.