80 வயதினருடைய பெயர் விவரப்பட்டியலை தர இயலாது தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதசாகு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்
80 வயதுடைய முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் வாக்குச் சாவடிக்கு நேரில் சென்று வாக்களிக்க விரும்பாவிட்டால் தபால் ஓட்டு போடலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. சார்பில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் தேர்தலில் ஓட்டுப்போடும் 80 வயதுடையவர்களின் பெயர் விவரப்பட்டியலை வெளியிட வேண்டும் என்று கோரப்பட்டது.
இதற்கு பதில் அளித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதசாகு தரப்பில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது: 80 வயதை கடந்த முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் பற்றிய தரவுகள் தனியாக திரட்டப்படுகிறது. எல்லோருக்கும் சம உரிமை, சம வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற அரசியலமைப்பு விதியின் கீழ் இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு தபால் ஓட்டு போடுவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
அதன் பேரில் படிவங்கள் வழங்கப்படும். தேவைப்பட்டால் தபால் ஓட்டு படிவங்களை சேகரிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். அவர்களது பெயர் விவரப்பட்டியலை முன்கூட்டியே வெளியிடுவது அவர்களது தனிப்பட்ட உரிமைக்கு மாறானது. எனவே அரசியல் கட்சிகளுக்கு இப்போது கொடுக்க முடியாது. சிலர் நேரில் சென்று கூட வாக்களிக்க விரும்பலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.