வங்க கடலில் உருவாகி உள்ள நிவர் புயல், நண்பகலுக்குள் அதி தீவிர புயலாக வலுப்பெற்று, இன்று(நவ.,25) இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை சென்னை வானிலை ஆய்வு மையத்தின், தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: வங்கக்கடலில் உருவான நிவர் புயல், தீவிர புயலாக மாறி உள்ளது. இன்று நண்பகலுக்குள் புயல் அதி தீவிரமாக வலுப்பெறும். கடலூருக்கு 300 கி.மீ., புதுச்சேரிக்கு 310 கி.மீ., சென்னைக்கு 370 கி.மீ., தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது.
புயலால் நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டில் புயல் காரணமாக காற்றின் வேகம் அதிகரிக்கும். புயலின் தாக்கம், இன்றிரவு முதல் அதிகரிக்கும். 6 கி.மீ., வேகத்தில் நகரும் ‘நிவர்’ புயல், காரைக்கால் – மாமல்லபுரம் இடையே இன்று இரவு கரையை கடக்கும்.
புயல் கரையை கடக்கும் போது, காற்றின் வேகம் 145 கி.மீ., வேகத்தில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சென்னையில் அதிகபட்சமாக இதுவரை, நுங்கம்பாக்கத்தில் 14 செ.மீ., மழை பதிவானது. இவ்வாறு அவர் கூறினார்.