புதுக்கோட்டை அருகே கொரோனா தொடர்பாக வாட்ஸப்பில் வதந்தி பரப்பிய நபரை கறம்பக்குடி போலீஸார் கைது செய்தனர்.
கொரோனா வைரஸ் தாக்கம் உலகத்தையே அச்சுறுத்திவருகிறது.இந்த நிலையில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் கடைகளில் பொருட்கள் வாங்கக்கூடாது; வாங்கினால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் என வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வதந்தி பரவியது.
இதனை அறிந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் முகமது ஜான் கறம்பக்குடி காவல் நிலையத்தில் வாட்ஸ்-அப்பில் வதந்தி பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தார். இதுதொடர்பாக கறம்பக்குடி காவல்துறையினர் உடனே தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் வதந்தி பரப்பிய நபர் கறம்பக்குடி அடுத்த மங்களாகோயிலை சேர்ந்த கார்த்திக் (33) என்பது தெரியவந்தது.கறம்பக்குடி காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து கார்த்திகை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.