புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை 196 நாடுகளின் தேசிய கீதம் பாடி அசத்தும் சென்னையைச் சேர்ந்த சிறுமி சந்தித்து ஆசிபெற்றார். சிறுமியின் திறமையைக் கண்டு ரங்கசாமி வியந்து வாழ்த்து தெரிவித்தார்.
சென்னையைச் சேர்ந்த ஹேமந்த் – மோகனப்பிரியா தம்பதியின் மகள் சுபிக்ஷா. 12 வயதான சுபிக்ஷாவை பாடகராக்க வேண்டும் என பெற்றோர் விரும்பினர். பல நாடுகளின் தேசிய கீதத்தை சொல்லிக் கொடுத்தனர். உலக நாடுகளின் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கீதங்களாக 193 உள்ளன. சிறுமி அதையும் தாண்டி கூடுதலாக 3 நாடுகளின் தேசிய கீதங்களையும் சேர்த்து 196 தேசிய கீதங்களை சரளமாக பாடி அசத்தி வருகிறார். புதுவை வந்த இந்த சிறுமி தனது பெற்றோருடன் முதல்வர் ரங்கசாமியை சட்டப்பேரவையில் சந்தித்து ஆசி பெற்றார்.
அப்போது, முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் ஒரு சில நாடுகளின் தேசிய கீதங்களை பாடினார். இதைக்கேட்ட முதல்வ ரங்கசாமி சிறுமியின் திறமையை பாராட்டி வாழ்த்து கூறினார். 196 நாடுகளின் தேசிய கீதங்களை பாடும் சிறுமியின் முயற்சியை உலக சாதனையில் இடம்பெற அவரது பெற்றோர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.