பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு தினம் : உருவப்படத்திற்கு எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. நிறுவனருமான பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அண்ணாவின் நினைவுதினத்தையொட்டி சென்னை பசுமைவழிச்சாலை இல்லத்தில் அண்ணாவின் உருவப்படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும் அண்ணாவின் நினைவுதினத்தையொட்டி எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, சமூகவியல் கொள்கையாக இருந்த திராவிடத்தை ஒப்பற்ற அரசியல் தத்துவமாக மாற்றியவரும், ஆட்சிக் கட்டிலில் திராவிடத்தை அமரச் செய்து, மாநிலத்தின் பெயர் முதல் அரசின் பதவிகள், கோப்புகள் வரை “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என நவீன தமிழ்நாட்டை கட்டமைத்து அதனை தமிழ்மயமாக்கிய மாபெரும் தமிழ் கனவு கண்ட, கழகத்தின் முதல் எழுத்து, பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 55வது நினைவு நாளில் அவரைப் போற்றி வணங்குவதுடன், தமிழ்நாட்டின் சீர்மிகு கொள்கைகளாகப் பேரறிஞர் அண்ணா நிறுவிய சமூகநீதி-சமத்துவம்-மாநில சுயாட்சி ஆகியவற்றை தொடர்ந்து பேணிக் காத்திடுவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.