புதுக்கோட்டை மாவட்ட மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு அமைச்சர்கள் வங்கிக் கடனுதவித் தொகைக்கான காசோலைகளை வழங்கினர்

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஈரோடு மாவட்டத்தில் காணொலிக்காட்சி வாயிலாக இன்று தமிழ்நாடு மாநில ஊரக (ம) நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடனுதவிகள் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து புதுக்கோட்டை கற்பக விநாயகா மஹாலில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர், மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா, தலைமையில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடனுதவித் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்கள்.

பின்னர் சட்டத்துறை அமைச்சர் தெரிவிக்கையில்;

தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற உயர;ந்த நோக்கத்தில் பெண்களுக்கான பல்வேறு அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில், இன்றையதினம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடனுதவிகள் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பொருளாதார செயல்பாடுகளுக்காக தமிழ்நாடு மாநில ஊரக (ம) நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களின் வாழ்வாதாரம் நிலைத்து நீடித்திடவும் மற்றும் வாழ்க்கைத்தரம் உயர்வதற்கும், தொழில் தொடங்கி பொருளாதாரம் மேம்படையவும், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பிற்கு நிதி விடுவிக்கப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் பொருளாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டு 695 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு ரூ.45.88 கோடியும், 30 ஊராட்சி மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்பிற்கு ரூ.14.25 கோடியும், 208 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி ரூ.1.98 கோடியும், வட்டார வளமைய கடன் 97 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.48 இலட்சமும், மதி எக்ஸ்பிரஸ் 3 மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள 3 நபர்களுக்கு ரூ.9 இலட்சமும், சுழல் நிதி 83 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.10 இலட்சமும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் 22 நபர்களுக்கு இணை மானியம் ரூ.2 கோடியும், உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான துவக்க நிதி ரூ.5 இலட்சமும், NEFF ரூ.12 இலட்சமும், Training Kit ரூ.30 ஆயிரம் என ஆகமொத்தம் ரூ.64 கோடியே 88 இலட்சத்திற்கான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. என தெரிவித்தார்.

பின்னர் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது;

மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு, வங்கிக் கடனுதவிகள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு வங்கி பெருங்கடன், சமுதாய முதலீட்டு நிதி, சுழல் நிதி, தனிநபர் தொழில் வங்கிக் கடன், தொழில் குழு வங்கிக் கடன், தொழிற்குழுக்களுக்கான துவக்க நிதி, சமுதாய பண்ணைப் பள்ளிகள் அமைப்பதற்கான நிதி உள்ளிட்ட பல்வேறு வகையான திட்டங்களின் மூலம் ரூ.64.88 கோடி மதிப்பீட்டில் 1,162 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 11,854 உறுப்பினர்களுக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டது. எனவே மகளிர் சுயஉதவிக் குழுவினர்கள் அனைவரும் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் இதுபோன்ற மக்கள்நலத் திட்டங்கள் உரிய முறையில் பெற்று சமுதாயத்தில் உயர்ந்த நிலையினை அடைய வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மரு.வை.முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயலட்சுமி தமிழ்செல்வன், நகர்மன்றத் தலைவர் திலகவதி செந்தில், தமிழ்நாடு மாநில ஊரக (ம) நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) திட்ட இயக்குநர் பி.ஜே.ரேவதி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், நகர்மன்றத் துணைத் தலைவர் லியாகத் அலி, மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் திரிபுர சுந்தரி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் சந்திரசேகரன், உதவித்திட்ட அலுவலர் தில்லைமணி, அறந்தாங்கி  சரக துணைப் பதிவாளர் ஆறுமுகப்பெருமாள், கூட்டுறவு சார்பதிவாளர் அன்னலெட்சுமி, வட்டாட்சியர் பரணி, எம்.எம்.பாலு, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.