
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடாக போற்றப்படும் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 27-ம் தேதி குடமுழுக்கு நடத்தப்பட உள்ளது. கடைசியாக பழனி கோவிலுக்கு கடந்த 2006-ம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. இக்கோவிலின் குடமுழுக்கு விழாவில் கலந்துகொள்ளும்பக்தர்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று கோயில் நிர்வாகம் அறிவித்தது, அதன்படி கடந்த 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை கட்டணம் இல்லாமல் முன்பதிவு நடைபெற்றது, ஆனால் குடமுழுக்கு விழாவில் 2,000 பக்தர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் முன்பதிவு செய்துள்ள பக்தர்களில் 2 ஆயிரம் பேரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்காக குலுக்கல் நிகழ்வு இன்று மாலை நடைபெற உள்ளது, இதில் தேர்வாகும் பக்தர்களுக்கு குறுஞ்செய்தி, இ-மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.