பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ராஜினாமா

பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தனது சொந்த காரணங்களுக்காகவும், வேறு சில கடமைகளுக்காகவும் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக பன்வாரிலால் புரோஹித் ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பன்வாரிலால் புரோகித் நேற்று சந்தித்த நிலையில் இன்று ராஜினாமா முடிவை எடுத்துள்ளார்.

பஞ்சாப் மாநில ஆளுநராகவும், சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியாகவும் கடந்த 2021ல் பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார். கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக பஞ்சாப் ஆளுநராக செயல்பட்டுவந்த நிலையில் தற்போது பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். இதுதொடர்பாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில் “தனது சொந்த காரணங்களுக்காகவும், வேறு சில கடமைகளுக்காகவும் ராஜினாமா செய்வதாகவும், இதனை தயவு செய்து ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும் பன்வாரிலால் புரோஹித்துக்கும் மோதல் போக்கு நீட்டித்துவந்த நிலையில் ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்திருப்பது பஞ்சாப் அரசியலில் கவனம்பெற்றுள்ளது. நவம்பர் 10, 2023 அன்று, பஞ்சாப் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஐந்து மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் தாமதம் ஏற்பட, விவகாரம் உச்ச நீதிமன்றம் சென்றது. பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிரான வழக்கை விசாரித்த இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, “நீங்கள் நெருப்புடன் விளையாடுகிறீர்கள்” என்றுகூறி எச்சரித்தது.

கடந்த 1940-ம் ஆண்டு பிறந்த பன்வாரிலால் புரோஹித், தமிழகத்தின் 14-வது ஆளுநராக 2017-ம் ஆண்டு செப்டம்பரில் பதவியேற்றார். அதற்கு முன்பு அவர் அசாம் மாநில ஆளுநராக பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், மகாராஷ்டிராவின் நாக்பூர் தொகுதியில் இருந்து 2 முறை காங்கிரஸ் சார்பாகவும், ஒருமுறை பாஜக சார்பாகவும் மக்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர் பன்வாரிலால் புரோஹித். பாஜகவின் முக்கியத் தலைவராகவும் கருதப்பட்டவர்.