நாகர்கோவிலில் டியூஷன் போக சொல்லி அம்மா கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை

நாகர்கோவிலில் டியூஷன் போக சொல்லி அம்மா கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நாகர்கோவில், கோட்டார் டி.வி.டி. காலனியை சேர்ந்தவர் பத்மநாபன். இவருடைய மனைவி பானு. இவர்களுக்கு மது பிரசாத் (15) என்ற மகனும், ஒரு மகளும் உண்டு. பத்மநாபன் தஞ்சாவூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி வேலை பார்த்து வருகிறார். மகன் மது பிரசாத் நாகர்கோவிலில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பள்ளி முடித்ததும் மது பிரசாத்தை டியூசனுக்கு செல்லுமாறு அவருடைய தாயார் கூறியதாக தெரிகிறது. ஆனால் மது பிரசாத் டியூசனுக்கு செல்ல மறுத்துள்ளார். அதனை தாயார் கண்டித்ததால் மது பிரசாத் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தூங்க சென்ற அவர் நேற்று காலை அறையை விட்டு வெளியே வராததால் அவரது தாய் அறைக்கு உள்ளே சென்று பார்த்துள்ளார். அங்கு மது பிரசாத் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பானு கூச்சலிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.