
திருவேற்காட்டில் பிளஸ்-2 தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சென்னை திருவேற்காடு, வி.ஜி.எஸ். நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத். இவருடைய மகன் திவாகர் (18). இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான பிளஸ்-2 தேர்வு முடிவில் தமிழ், கணிதம் ஆகிய 2 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் திவாகர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். அவருக்கு பெற்றோர் ஆறுதல் கூறி சமாதானம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் பெற்றோர் வெளியே சென்றுவிட்டதால் திவாகர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். தேர்வில் தோல்வி அடைந்த விரக்தியில் இருந்த திவாகர், படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து திருவேற்காடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.