
திருமயம் தாலுகா தெக்கூரைச்சேர்ந்த நமச்சிவாயம் மகன் மாங்குடி(45). விவசாயி. இவரது மனைவி சகுந்தலா. இவர்களுக்கு ஒருமகன்,ஒரு மகள் உள்ளனர். இவருக்கு தெக்கூரில் 5 ஏக்கரில் தோட்டம் உள்ளது. அங்கு மாடுகளை கட்டி வளர்த்து வந்தார். இன்று மாலை வீட்டிலிருந்து பைக்கில் தோட்டத்திற்கு மாடுகளுக்கு தண்ணீர் வைக்க சென்றுள்ளார். போனவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது மகன் அங்கு சென்று தேடியுள்ளார். அதுசமயம் மாங்குடி வெட்டுக்காயத்துடன் இறந்து கிடந்துள்ளார்.
இதனால் பதறிப்போன அவரது குடும்பத்தினர் கே.புதுப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். பொன்னமராவதி டிஎஸ்பி அப்துல்ரகிமான், இன்ஸ்பெக்டர் பெரியசாமி ஆகியோர் மாங்குடி உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். தலை,கை,கால்களில் அரிவாள் வெட்டுக்காயங்கள் இருந்தன. மேலும் இவ்வழக்கில் துப்புத்துலக்க போலீஸ் மோப்ப நாய்,வரவழைக்கப்பட்டது. விரல்ரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை ஆய்வு செய்தனர்.புதுகை எஸ்.பி.வந்திதா பாண்டே சம்பவ இடத்தைப்பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கொலைக்கான காரணம் தெரியவில்லை. இச்சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.