தமிழக சட்டப்பேரவையில் ஒரே நாடு, ஒரே தேர்தல், தொகுதி மறுவரையறை ஆகியவற்றுக்கு எதிர்ப்பு – முதல்வர் ஸ்டாலின் தனித்தீர்மானம் நிறைவேற்றம்

ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தனித்தீர்மானம் தாக்கல் செய்தார்.

தனித்தீர்மானத்தை தாக்கல் செய்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “நாட்டையும், நாட்டு மக்களையும் பதற்றத்தில் வைக்கும் இரண்டு முக்கியமான பிரச்சினைகள் குறித்து இந்த மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியே ஆக வேண்டிய நெருக்கடியான அரசியல் சூழ்நிலை நமக்கு ஏற்பட்டுள்ளது. ஒன்று; ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற மிக மோசமான எதேச்சிதிகர திட்டம். இதனை நாம் கடுமையாக எதிர்த்தாக வேண்டும். இரண்டாவது; மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரால் தமிழ்நாட்டின் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை குறைக்க நினைக்கும் சதி. இதனை முறையடிக்க வேண்டும்.

இந்த இரண்டு திட்டங்களும் மக்களாட்சியை குலைக்கும் செயல் என்பதால், இவற்றுக்கு எதிராக நாம் அனைவரும் ஒருசேர குரல் கொடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். முதலில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது எத்தகைய ஆபத்து நிறைந்தது என்பதை விளக்க விரும்புகிறேன். ஒரே நாடு, ஒரே தேர்தல் எனும் முறை முற்றிலுமாக நடைமுறைக்கு சாத்தியமற்ற ஒன்று. அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சத்துக்கு எதிரானது. அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள சுதந்திரமான, நேர்மையான தேர்தலுக்கு முற்றிலும் எதிரானது. ஒரே நேரத்தில் தேர்தல் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்றங்களை முன்கூட்டியே கலைக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்றும் அப்படி கலைப்பது அரசியல் சட்டவிரோதம் என்பதாலும் இந்த நடைமுறையை நாம் எதிர்க்க வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி அமைத்து, மத்தியில் அமையும் ஆட்சி கவிழுமானால் அனைத்து மாநிலங்களையும் கலைத்துவிட்டு தேர்தல் நடத்துவார்களா?.

சில மாநிலங்களில் ஆட்சி கவிழ்ந்து தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டால், மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் தாமாக முன்வந்து பதவி விலகுவார்களா. இதைவிட காமெடி கொள்கை இருக்க முடியுமா?. நாடாளுமன்றம், சட்டமன்றத்துக்கு மட்டுமல்ல உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமா?. நாடாளுமன்ற தேர்தலையே கூட, ஒரே நாளில் இந்தியா முழுவதும் நடத்த தயாராக இல்லாத சூழல் தான் இப்போது இருக்கிறது. இந்நிலையில் நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 30 மாநில சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது மாயாஜாலமா?.

நகராட்சிகளும், பஞ்சாயத்துகளும் மாநில அரசின் நிர்வாக அமைப்புகள் என அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டவை. எனவே இவற்றுக்கும் நாடாளுமன்றம், சட்டமன்றத்துடன் தேர்தல் என்பது அரசியல் சட்டவிரோதம் ஆகும். உள்ளாட்சி தேர்தல் முழுக்கமுழுக்க மாநில அரசின் நிர்வாக கட்டுப்பாட்டில் இருப்பதாகும். அவற்றுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்போவதாக சொல்வது மாநில உரிமைகளை பறிப்பதாகும். மாநில உரிமைகள், கூட்டாட்சி தத்துவம், அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தை சிதைக்கவோ, உருமாற்றவோ, விரைவில் மக்களால் நிராகரிக்கப்பட உள்ள நாடாளுமன்ற மெஜாரிட்டி உள்ளோரின் செயலுக்கு யாரும் பலியாகிவிட கூடாது. எனவே நாடாளுமன்றம், சட்டமன்றம், நகராட்சிகள், பஞ்சாயத்து ஆகியவற்றுக்கு ஒரே நாடு, ஒரே தேர்தல் என்னும் நடைமுறையை மிக கடுமையாக எதிர்த்தாக வேண்டும்.

இரண்டாவதாக தொகுதி மறுவரையறையை குறித்த ஆபத்துகளை விளக்க விரும்புகிறேன். தொகுதி மறுவரையறை திட்டத்தில் தென் இந்திய மக்களை குறிப்பாக தமிழ்நாட்டு மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதிதுவத்தை குறைக்கக்கூடிய சூழ்ச்சி இருக்கிறது. இதனை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும். தமிழ்நாட்டின் மீது தென்னிந்தியாவின் மீது தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக தொகுதி மறுவரையறை உள்ளது. அரசியல் விழிப்புணர்வு மிக்க தமிழ்நாட்டை வஞ்சிக்கிற அநீதியான இந்த முயற்சி முளையிலேயே கிள்ளியெறியபட வேண்டும். இந்திய அரசமைப்பின் 82 மற்றும் 170ம் பிரிவுகளின் கீழ், ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு நாடாளுமன்றம், சட்டமன்றத்துக்கு புதிய இடங்கள் உருவாக்கப்படுகின்றன. ஏற்கனவே உள்ள தொகுதிகளின் எல்லைகள் மறுசீரமைப்பு செய்யப்படுகின்றன. எல்லை நிர்ணய சட்டத்தின்படி இவை செய்யப்படுகின்றன. இந்த சட்டத்தின்படி எல்லை நிர்ணய ஆணையத்தை ஒன்றிய அரசு அமைத்து வருகிறது.

இதுவரை, 1952, 1962, 1972 மற்றும் 2002 ஆகிய ஆண்டுகளில் எல்லை நிர்ணய ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 1976ம் ஆண்டு வரை ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பு பிறகும், மக்களவை, மாநிலங்களவை, சட்டமன்ற பேரவை இடங்கள் மறுநிர்ணயம் செய்யப்பட்டு வந்தன. இவ்வாறு மறுநிர்ணயம் செய்யும்போது மக்கள் தொகையின் அடிப்படையில் மக்களவை, மாநிலங்களவை, சட்டமன்ற பேரவை இடங்கள் குறைக்கப்படுகின்றன. அதாவது மக்கள் தொகை கட்டுப்பாடு என்னும் கொள்கையை தீவிரமாக செயல்படுத்தி மக்கள் தொகையை குறைத்துக்கொண்ட மாநிலங்களுக்கு தரப்படும் தண்டனையாக இது அமைந்துள்ளது. இதனால் மக்கள் தொகை குறையும் மாநிலங்களுக்கான நாடாளுமன்ற பிரதிநிதிதுவம் குறையும். மக்கள் தொகை கட்டுப்பாட்டில் ஆர்வம் செலுத்தாத மாநிலங்கள் கூடுதல் பரிசை பெறும். அவற்றுக்கான பிரதிநிதிதுவம் அதிகமாகும். இதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை எதிர்த்தாக வேண்டும். மக்கள் தொகை குறைவதால் ஜனநாயக உரிமைகள் மாநிலங்களுக்கு குறையக் கூடாது என்பதற்காக அரசியலமைப்பில் 42வது சட்டத்திருத்தம் செய்யப்பட்டது. 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு வரை தொகுதிகளின் எண்ணிக்கை மாற்றம் செய்வதை மத்திய அரசு நிறுத்தி வைத்திருந்தது. அதுபோலவே, அரசியலமைப்பு சட்டத்தில் 84வது திருத்தமும் செய்யப்பட்டது.

தொகுதிகளின் எண்ணிக்கையில் 2026ம் ஆண்டு வரை மாற்றம் செய்யப்படாது என்றும் 2026ம் ஆண்டுக்குப் பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டப் பேரவையில் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்படும் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்தால் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் பெரும் பின்னடைவை சந்திக்கும். 1971ம் ஆண்டு தமிழ்நாடும், பிஹாரும் கிட்டத்தட்ட ஒரே அளவிலான மக்கள் தொகையை கொண்டிருந்ததால் மக்களவையில் ஒரே அளவிலான தொகுதிகளை கொண்டிருந்தன. இன்று தமிழ்நாட்டு உடன் ஒப்பிடுகையில் பிஹாரில் மக்கள் தொகை ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் மத்திய அரசு மேற்கொள்ள உத்தேசித்துள்ள தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தமிழ்நாட்டில் தற்போதைய மக்களவை, மாநிலங்களவை மற்றும் சட்டமன்ற பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை வட மாநிலங்களின் எண்ணிக்கையை விட விகிதாசாரத்தில் குறைந்துவிடும். இதனை நினைத்து பார்த்தால் அச்சமாக இருக்கிறது.

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக இவர்கள் குரல்கொடுத்து வருகிறார்கள். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை குறைத்துவிட்டால் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்துவிடும். 39 எம்பிக்கள் இருக்கும்போதே மத்திய அரசிடம் கெஞ்சிக்கொண்டிருக்கிறோம். இதிலும் குறைந்தால் என்ன ஆகும். தமிழ்நாடு கோரிக்கை வைக்கும் பலத்தை இழக்கும், சக்தியை இழக்கும் அதனால் உரிமையை இழக்கும். இதனால் தமிழ்நாடு பின்தங்கிவிடும். எனவே, தொகுதி மறுவரையறை என்ற பெயரால் தொகுதிகளின் எண்ணிக்கையை எந்த சூழலிலும் குறைக்க கூடாது என்கிறோம். மக்கள் தொகையை குறைந்ததை காரணம் காட்டி தென் மாநிலங்களுக்கு தொகுதிகளை குறைப்பது தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களை பலவீனமடைய செய்யும். எனவே, அனைத்து மாநிலங்களிலும் மக்கள் தொகை கட்டுப்பாட்டு நடவடிக்கையை தீவிரமாக மேற்கொள்ளும் வரை தொகுதிகளின் எண்ணிக்கையை இப்படியே தொடர செய்வது சரியாகும். இதுபோன்ற பாரபட்சம்தான் நிதி ஒதுக்கீட்டிலும், நிதி பகிர்விலும் காட்டப்படுகிறது. மக்கள் தொகையை காரணம் காட்டி தென் மாநிலங்களுக்கு வரி வருவாயின் பங்கு குறைந்துவிட்டது.

இந்தியா என்பது பல்வேறு மாநிலங்கள் இணைந்த மாபெரும் நாடு. பல்வேறு மாநிலங்கள் இணைந்த கூட்டாட்சி, கூட்டரசு இது. இங்கு எந்த மாநிலமும் பிற மாநிலத்தை விட உயர்ந்ததோ முக்கியமானதோ அல்ல. அனைத்தையும் சமமாக நடத்த வேண்டும். மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப மட்டுமே பிரதிநிதித்துவம் என்று மாநிலங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டால், புவியியல், மொழி, பொருளாதார அரசியல் பின்னணியை புறந்தள்ளும் செயலாகிவிடும். மக்களாட்சியின் ஆதார பன்பையே அது நாசமாக்கிவிடும். இதனால், கனல் வீசிக் கொண்டிருக்கும் எதிர்ப்பு உணர்வுகளை மேலும் வளர்ப்பது போல் ஆகிவிடும். இந்தியாவின் ஒற்றுமையை இதுநாள் வரை கட்டிக்காத்து வரும் கூட்டாட்சி தத்துவத்தையை மீறும் செயல் எதையும் மத்திய அரசு மேற்கொள்ள கூடாது.

2026ம் ஆண்டுக்கு பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மேற்கொள்ளப்படவிருக்கும் தொகுதி மறுவரையறை நடவடிக்கையை கைவிட வேண்டும். தவிர்க்க முடியாத காரணங்களால் மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் 1971ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை எந்த அளவில் உள்ளனவோ அதே அளவில் இருக்க சட்டத்திருத்தம் செய்ய வேண்டும். மத்திய அரசை வலியுறுத்தும் இந்த தீர்மானத்தை இந்த சட்டப்பேரவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்று பேசினார் முதல்வர் ஸ்டாலின்.

அதனைத்தொடர்ந்து, தொகுதிகள் எண்ணிக்கைகள் குறைக்கப்பட கூடாது என்று அ.தி.மு.க. சார்பில் தளவாய் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார். இது தொடர்பாக அ.தி.மு.க. சார்பில் 10 கோரிக்கைகள் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் பேசுகையில், “மத்திய அரசின் நடவடிக்கையை முக்கிய சீர்திருத்தமாக பார்க்க வேண்டும். எனவே இந்த தீர்மானங்கள் தேவையற்றது” என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

அதன் பிறகு அவை முன்னவர் அமைச்சர் துரைமுருகன் தீர்மானங்கள் ஏன் கொண்டு வரப்பட்டு உள்ளது என்று விளக்கம் அளித்து பேசினார். இதையடுத்து தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.