தனக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் அண்ணாமலை மேல்முறையீடு

இரு மதத்தினர் இடையே வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேல்முறையீடு செய்துள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தீபாவளி பண்டிகை குறித்து சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார். அப்போது, கிறிஸ்தவ மிஷனரிகள் தான் முதலில் தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததாக குறிப்பிட்டிருந்தார். அண்ணாமலையின் இந்த பேச்சு இரு மதத்தினரடைய விழிப்புணர்வை தூண்டும் வகையில் இருப்பதாக சேலத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஷ் மனுஷ், சேலம் நீதிமன்றத்தில் அண்ணாமலைக்கு எதிராக புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.

இது தொடர்பாக நேரில் ஆஜராக நீதிமன்றம் அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பியிருந்தது. இதற்கு எதிராகவும், தன் மீதான புகாரை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியும், அண்ணாமலை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில் தனது பேச்சு தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டது என அவர் தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அண்ணாமலை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ததோடு, அவர் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்தார்.

மேலும் சேலம் நீதிமன்றம் சட்டத்திற்கு உட்பட்டு மனுவை விசாரிக்கலாம் எனவும் அவர் உத்தரவிட்டார். இதனிடையே உயர் நீதிமன்ற நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து அண்ணாமலை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தனக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என அண்ணாமலை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.