ஜாக்டோ – ஜியோவின் வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு : முதல்வரை சந்தித்த பின் அறிவிப்பு

நாளை நடைபெற இருந்த வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை வேலை நிறுத்தப் போராட்டத்தை ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் அறிவித்து இருந்த நிலையில், அந்த போராட்ட அறிவிப்பை திரும்ப பெற்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில், இந்தப் போராட்ட அறிவிப்பை திரும்பப் பெற்றனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஜாக்டோ – ஜியோ அமைப்பினர், “பழைய ஓய்வூதிய திட்டத்தை பல மாநிலங்கள் செயல்படுத்திவிட்டன. இதை முதல்வரிடம் தெரியப்படுத்திய போது, “நான் தராமல் யார் தர போகிறார்கள். நிச்சயம் பழைய ஓய்வூதியம் வழங்கப்படும். மேலும், மிக விரைவில் நிதி நிலை சரி செய்த பிறகு உங்கள் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக சரி செய்யப்படும்” என்று முதல்வர் ஸ்டாலின் எங்களிடம் உறுதியளித்தார்.

முதல்வரை சந்தித்ததன் அடிப்படையில் அவர் அளித்த உறுதியின் அடிப்படையில் நாளை நடைபெற இருந்த போராட்டத்தை ஒத்திவைக்க முடிவெடுத்துள்ளோம். சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவதற்குள் எங்களது பொருளாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை ஒத்திவைப்பது என்று முடிவு செய்துள்ளோம். 19-ம் தேதிக்கு பிறகு ஜாக்டோ – ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர் மீண்டும் கூடி அடுத்தகட்ட முடிவை தெரிவிப்போம். முதல்வர், அமைச்சர்கள் எல்லோரிடம் இதனை வலியுறுத்தியுள்ளோம்” என்று தெரிவித்தனர்.