சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம்

சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக்கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார்.

சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி சட்டப்பேரவையில் அரசின் தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கொண்டு வந்தார். இதில் முதல்வர் பேசுகையில், “அண்ணாவின் கனவு திட்டம் சேது சமுத்திரத் திட்டம், இந்த திட்டத்திற்கான தீர்மானத்தை முன்மொழிகிறேன். 1967-ம் ஆண்டு ஆட்சி பொறுப்புக்கு வந்த பேரறிஞர் அண்ணா, கருணாநிதிக்கு எழுதிய மடலில் இத்திட்டத்தை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள்.

சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நிறைவேற்றினால் வர்த்தகம் பெருகும், இலங்கையை சுற்றிக்கொண்டு கப்பல் போக வேண்டிய நீளம் குறையும், மீனவர்கள் வாழ்வு செழிக்கும். 2004-ம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்தபோது அப்போதய பிரதமர் மன்மோகன்சிங் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். 1998-ம் ஆண்டு அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், இத்திட்டத்துக்கான பணிகளுக்கு நிதி ஒதுக்கினார், பாஜக ஆட்சியில் தான் சேது சமுத்திர திட்டத்துக்கான பாதை எது என தீர்மானிக்கப்பட்டது.

2004-ம் ஆண்டு ஒன்றிய அளவில் காங்கிரஸ் ஆட்சி மாறி திமுக கூட்டணி ஆட்சி வந்த பிறகு ரூ.247 கோடி நிதி ஒதுக்கப்பட்டு திட்டப் பணிகள் 50% முடிந்த நிலையில், அரசியல் காரணங்களுக்காக பாஜக இத்திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்டது. சேது சமுத்திர திட்டத்தை இனியும் நிறைவேற்றால் இருப்பது தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு, வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் நிகழ்வாகவே கருதி இந்த மன்றம் கவலை தெரிவிக்கிறது. இனியும் இந்த திட்டத்தை செயல்படுத்தவிடால் சில சக்திகள் முயல்வது நாட்டின் வளர்ச்சிக்கு எதிரானது என்று இந்த மாமன்றம் கருதுகிறது.

எனவே, மேலும் தாமதம் இன்றி ஒன்றிய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்த முன் வர வேண்டும். திட்டத்தை செயல்படுத்த தமிழக அனைத்து ஒத்துழைப்பும் வழங்கும்.” இவ்வாறு முதல்வர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

75 − 68 =