சென்னை – எர்ணாகுளம் இடையே சிறப்பு ரெயில் இயக்கம்: மகிழ்ச்சியில் ஐயப்ப பக்தர்கள்!

சென்னையிலிருந்து எர்ணாகுளத்திற்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தென்னக ரெயில்வே அறிவித்துள்ளதால் ஐயப்ப பக்தர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து எர்ணாகுளத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

இந்த வாராந்திர சிறப்பு ரெயில் (06068), எர்ணாகுளம் சந்திப்பில் இருந்து நவ.28, டிச.5, 12, 19, 26, ஜன.2 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமைகளில்) மதியம் 1.10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12 மணிக்கு தாம்பரம் வரும். அதேபோல, தாம்பரத்தில் இருந்து வாராந்திர சிறப்பு ரெயில் (06067), நவ.29, டிச.6, 13, 20, 27, மற்றும் ஜன. 3 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமைகளில்) பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12 மணிக்கு எர்ணாகுளம் சந்திப்பை அடையும்.

இந்த ரெயில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு விழுப்புரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராஜபாளையம், தென்காசி, செங்கோட்டை, புனலூர், கொல்லம், செங்கனூர், கோட்டயம் வழியாக எர்ணா குளத்தை சென்று அடையும். இந்த சிறப்பு ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது. இவ்வாறு தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.