செந்துறை பகுதியில் ரூ.3.56 கோடி மதிப்பீட்டில் புதிய வளர்ச்சித் திட்டப் பணிகள் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கி வைத்தார்

அரியலூர் : பிப். 5, அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்தில், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், ரூ.3.56 கோடி மதிப்பீட்டில் பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டப் பணிகளை, போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்  தொடங்கி வைத்தார்.
அதன்படி செந்துறை ஊராட்சி ஒன்றியம், செந்துறை பெருமாள் கோவில் அருகில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.13.57 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தினை திறந்து வைத்து, அங்கன்வாடி மையத்திற்கு வருகைபுரிந்த குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி வரவேற்றார். தொடர்ந்து செந்துறை ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.38.5 இலட்சம் மதிப்பில் 1,00,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி அமைக்கும் பணியினை தொடங்கி வைத்து, பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுறுத்தினார்.

செந்துறையில் ஊராட்சி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 103 மாணவர்களுக்கும், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 175 மாணவிகளுக்கும் ரூ.13.38 இலட்சம் மதிப்பிலான தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கியதுடன், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் பொதுத் தேர்வினை எளிதில் எதிர்கொள்ளும் வகையில், கல்வித்துறையில் அனுபவம் வாய்ந்த அரசுப்பள்ளி ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட, அனைத்து பாடப்பிரிவுகளிலும் மிக முக்கியமான வினா -விடைகள் அடங்கிய, “தேர்வை வெல்வோம்” புத்தகங்களை தனது சொந்த செலவில் தயாரித்து, மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

அதனை தொடர்ந்து செந்துறை ஊராட்சியில் 15வது நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ், ரூ.38.5 இலட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலைய புதிய கட்டடம் கட்டும் பணியினையும், பின்னர் இலங்கைச்சேரி கிராமத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.16.75 இலட்சம் மதிப்பில் 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி அமைக்கும் பணியினையும் தொடங்கி வைத்து,  பணியினை தரமான கட்டுமான பொருட்களை கொண்டு விரைவில் முடித்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

நல்லாம்பாளையம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.12.6 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டிடத்தினை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு பொருள்களை வழங்கி விற்பனையை தொடங்கி வைத்தார். மேலும், நல்லாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் சிறுகடம்பூர் அரசு உயர்நிலைப்பள்ளிகளில் பொதுத்தேர்வை எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு ”தேர்வை வெல்வோம்” 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வினா – விடை புத்தகத்தினை வழங்கினார். பின்னர், உஞ்சினி ஊராட்சியில், குழந்தைகள் நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.28 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறை கட்டிடத்தினை திறந்து வைத்தார்.

ஆனந்தவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 41 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1.98 இலட்சம் மதிப்பிலும், இரும்புலிக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியை பயிலும் 48 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.33 இலட்சம் மதிப்பிலும்   பரணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 100 மாணவ, மாணவிகளுக்கு ரூ.4.85 இலட்சம் மதிப்பிலும், தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கியதுடன், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ”தேர்வை வெல்வோம்” வினா – விடை புத்தகத்தினையும் வழங்கினார். தொடர்ந்து, குமிழியம் கிராமத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.27.25 இலட்சம் மதிப்பில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி அமைக்கும் பணியினையும், குமிழியம் அல்லூர்பட்டி தெருவில் மகாத்மா காந்தி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.7.35 இலட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினையும் தொடங்கி வைத்து பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து பிலாக்குறிச்சி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.13.57 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டிடத்தினை திறந்து வைத்தார். தொடர்ந்து வீராக்கன் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் தி;ட்டத்தின் கீழ் ரூ.12.3 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட நியாய விலைக்கடையினை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு பொருள்களை வழங்கி விற்பனையை தொடங்கி வைத்தார். பின்னர், மருவத்தூர் கிராமத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.27.25 இலட்சம் மதிப்பில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி அமைக்கும் பணியினையும், தொடர்ந்து சேடக்குடிக்காடு கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலைக்கடை கட்டிடம் அமைக்கும் பணியினையும் தொடங்கி வைத்ததுடன், நியாய விலைக்கடை அமைப்பதற்கு நிலம் வழங்கிய சேடக்குடிகாடு, தெற்குத்தெருவைச் சேர்ந்த செந்தில் என்பவருக்கு, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பொன்னாடைப் போற்றி வாழ்த்துத் தெரிவித்தார்.

பின்னர், நக்கம்பாடி ஆதிதிராவிடர் காலனியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் அமைத்தல் பணியினையும், நின்னியூர் கிராமத்தில் குழந்தைகள் நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.37.5 இலட்சம் மதிப்பீட்டில் புதிய இரண்டு வகுப்பறை கட்டடம் அமைக்கும் பணியினையும் துவக்கி வைத்து, பணிகளை தரமான கட்டுமான பொருட்களை கொண்டு, விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் .சா.சி.சிவசங்கர் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் கங்காதாரணி, துணை இயக்குநர் சுகாதார பணிகள் அஜித்தா, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) ஜெயா, வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், ஊராட்சிமன்றத் தலைவர்கள், அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாணவ, மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.