
அடுத்த ஒன்றரை ஆண்டுகளில், 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்குமாறு அனைத்து மத்திய அரசு துறைகளையும் பிரதமர் மோடி கடந்த ஜூன் மாதம் கேட்டுக்கொண்டார். அதைத்தொடர்ந்து, கடந்த அக்டோபர் மாதம், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 75 ஆயிரம் பேருக்கு பிரதமர் மோடி பணி நியமன கடிதங்களை வழங்கினார்.
இந்நிலையில், மத்திய அரசின் ரோஜ்கார் மேளா (வேலைவாய்ப்பு கண்காட்சி) இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் நடந்தது. அதில், 71 ஆயிரம் பேருக்கு காணொலி காட்சி மூலமாக பிரதமர் மோடி பணி நியமன கடிதங்களை வழங்கினார்.
காகித வடிவிலான பணி நியமன கடிதங்கள் 71 ஆயிரம் பேருக்கு, நாடு முழுவதும் 45 இடங்களில் நேரடியாக வழங்கப்பட்டன. சட்டசபை தேர்தல் நடக்கும் குஜராத், இமாசலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் மட்டும் இந்நிகழ்ச்சி நடைபெறாது.
வேலைவாய்ப்பு உருவாக்குவதற்கு உயர் முன்னுரிமை அளிக்கும் பிரதமரின் உறுதிப்பாட்டை இது காட்டுவதாக பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது. மேலும், வேலைவாய்ப்புகளை உருவாக்க இது தூண்டுகோலாக அமையும் என்றும் தெரிவித்துள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஆன்லைன் புத்தாக்க பயிற்சி திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்து புதிதாக வேலைவாய்ப்பு பெற்றவர்களை வாழ்த்தி பேசினார்.