கவர்னர்களுக்கு வாய் மட்டும் தான் இருக்கிறது காதுகள் இல்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

கவர்னர்களுக்கு வாய் மட்டும் தான் உண்டு; காதுகள் இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

‘உங்களில் ஒருவன் பதில்கள்’ என்ற தொடரில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னர்களுக்கு வாய் மட்டும் தான் உண்டு; காதுகள் இல்லை என்று விமர்சித்துள்ளார். கவர்னர் அரசியலில் தலையிடக்கூடாது என்று அண்மையில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளதற்கு பாஜக அரசின் கவர்னர்கள் செவிமடுப்பார்களா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இதுவரையிலான செயல்பாடுகளை பார்க்கும் போது, கவர்னர்களுக்கு வாய் மட்டும்தான் உண்டு; காதுகள் இல்லை என்றே தோன்றுகிறது” என்று கூறினார்.

மேலும் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, “எதிர்க்கட்சிகளை மறைமுகமாக இல்லை; வெளிப்படையாகவே பாஜக மிரட்டுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இது. தன் வசம் இருக்கும் விசாரணை அமைப்புகளை அரசியல் நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

டெல்லி துணை முதல்வர் மணீஷ் கைது கண்டிக்கத்தக்கது. பிரதமருக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியிருக்கிறேன். எதிர்க்கட்சிகளை தேர்தல் மூலமாக ஜெயிக்கலாமே தவிர விசாரணை ஆணையங்கள் மூலமாக வெல்ல நினைக்கக்கூடாது.” என்று பதிலளித்துள்ளார்.