களப்பாகுளம் பஞ்சாயத்து பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

சங்கரன்கோவில் யூனியன் களப்பாகுளம் பஞ்சாயத்து பகுதிகளில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளான பாரதி நகர், நேதாஜி நகர், தாசையா நகர், எழில் நகர், தென்றல் நகர் ஆகிய பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதாக அப்பகுதி மக்கள் ராஜா எம்எல்ஏவிடம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இதுகுறித்து உடனடியாக சங்கரன்கோவில் யூனியன் அலுவலகத்தில் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுடன் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ ஆலோசனை நடத்தினார்.

இதில் சங்கரன்கோவில்  யூனியன் சேர்மன் லாலாசங்கரபாண்டியன், குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் செல்லதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர் ராதா திருமலை, களப்பாகுளம் பஞ்சாயத்து தலைவர் சிவசங்கரி, வார்டு உறுப்பினர் அன்னராஜ் ஆகியோ பங்கேற்றனர். ஆலோசனையின் போது வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் பழைய மின் மோட்டார்களை மாற்றி உடனடியாக போர் கால அடிப்படையில் புதிய மின் மோட்டார்கள் பொருத்தி பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும் என அதிகாரிகளை வலியுறுத்தினார். தொடர்ந்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.