கறம்பக்குடி அருகே தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 10 போ் காயம்

பட்டுக்கோட்டையில் இருந்து கறம்பக்குடி வழியாக புதுக்கோட்டை வரை செல்லும் தனியார் பேருந்து  நேற்று மதியம் பயணிகளுடன் கறம்பக்குடி பெரியாற்றுப் பாலம் அருகே சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென சாலையில் புகுந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பேருந்து ஓட்டுனர் ப்ரேக் அடித்ததாகக் கூறப்படுகிறது.

இதில் நிலைதடுமாறிய பேருந்து அருகில் இருந்த சாலை தடுப்பின் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ், காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பேருந்துக்குள் சிக்கிய பயணிகளை பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் காயமடைந்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.கறம்பக்குடியில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.